சென்னை: இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் விலகி விட்டார் என்று பரவி வந்த செய்திக்கு தனுஷ் தரப்பு விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தென்னிந்திய மொழிகள், பாலிவுட், ஹாலிவுட் என திரைத்துறை பேதமின்றி பம்பரமாக சுழன்று நடித்து வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என பல பிரிவுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் நடிகர் தனுஷின் மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த X தளப்பதிவில் அவர், “நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் உண்மையல்ல.
லோகேஷ் கனகராஜின் `டிசி’ திரைப்படம் வெளியான பிறகு, திட்டமிட்டபடி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பணிகளைத் தொடங்குவார். இந்தத் திட்டம் குறித்த இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.