மும்பை: மும்பையில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான் ஆகியோருக்கு சொந்தமான டோரி என்ற சொகுசு உணவகத்தில் போலி பனீர் வழங்கப்படுவதாக யூடியூபர் சார்தக் சச்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். இந்த உணவகத்தில் உள்ள பனீர் தூய்மை தேர்வில் தோல்வியடைந்ததாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பிரபலங்களுக்கு சொந்தமான உணவகங்களில் வழங்கப்படும் பனீரில் கலப்படம் உள்ளதா என்பதை அறிய சச்தேவ் உணவு சோதனை நடத்துகிறார். அயோடின் பாட்டிலுடன் மும்பையில் உள்ள பிரபல உணவகங்களான விராட் கோலியின் ஒன்8 கம்யூன், ஷில்பா ஷெட்டியின் பாஸ்டியன், பாபி தியோலின் சாம்பிள்ஸ் எல்ஸ் போன்ற உணவகங்களுக்குச் செல்கிறார்.
அயோடின் சோதனையில் இங்கிருந்து பெறப்பட்ட பனீர் மாதிரிகளில் கருப்பு நிறம் இல்லை. ஷாருக்கானின் டோரி என்ற உணவகத்தில் சச்தேவ் சோதனை செய்தபோது, அயோடின் கருப்பு நிறமாக மாறியது. இதனால் ஷாருக்கானின் உணவகத்தில் வழங்கப்படும் பனீர் போலியானது என யூடியூபர் ஒருவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.