சென்னை: நடிகர் விஜய் தனது தவெக கட்சி மற்றும் ரசிகர் மன்றத்தின் சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கி வருகிறார். இந்த விழாக்களில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விஜய்யை நேரில் பார்க்கும் போது அன்பு, வரவேற்பு, உற்சாகம் என தங்கள் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்துகிறார்கள்.

விஜய்யை கட்டிப்பிடித்தல், பூங்கொத்து அளித்தல், சிறப்பு பரிசுகளை வழங்குதல், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது போன்ற பல நிகழ்வுகள் அந்த இடங்களில் நடக்கின்றன. சில மாணவர்கள் விஜய்யை பார்த்ததும் நெகிழ்ச்சியில் அழும் போதும், அவரிடம் கவிதைகள் வாசித்தும் அன்பை பகிர்கின்றனர். இவற்றை விஜய் அமைதியாகவும், எளிமையாகவும் எதிர்கொள்கிறார்.
இந்நிலையில், இந்த நிகழ்வுகளை விமர்சித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன். அவர் ஒரு நிகழ்ச்சியில், மாணவிகள் விஜய்யை கட்டிப்பிடிக்கிறார்கள் என்பதைக் கடுமையாக விமர்சித்ததுடன், “ஒரு வயது பெண்ணை கொண்டு போகிறார், மூன்று ஆண்டுகள் கழித்து டிகிரி முடிக்கும் பெண்ணையும் கூட்டி செல்கிறார். இது தமிழனின் நிலைமையா?” எனக் கேள்வி எழுப்பி, விஜய்யையும், அவரை வரவேற்க வந்த பெற்றோர்களையும் முற்றிலும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
இந்தப் பேச்சு வெளியான பிறகு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினை உருவாகியுள்ளது. பலரும் வேல்முருகனின் பேச்சு மிக மோசமானது என்றும், குழந்தைகள் மற்றும் பெற்றோரின் உண்மையான உணர்வுகளை இழிவாக வகைப்படுத்துவதாகவும் கூறி, அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
விஜய் மீது குழந்தைகள் காட்டும் அன்பை புரிந்துகொள்ளாமல், சமூக விழாக்களை தவறான நோக்கில் விமர்சித்த வேல்முருகனின் நடத்தை குறித்து இணையத்தில் பரவலான கண்டனங்கள் கிளம்பியுள்ளன. பலரும் இது ஒரு பொது நிகழ்ச்சியிலேயே அவர் அளித்த பேச்சாக இருந்ததால், அதற்கான சட்டரீதியான நடவடிக்கையும் தேவைப்படுகின்றது என கருத்து தெரிவிக்கின்றனர்.