சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களைப் படிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார். எதற்காக தெரியுமா?
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் மே.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
காதல், நகைச்சுவை, சண்டை என கமர்சியல் திரைப்படத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன் இப்படம் திரைக்கு வந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இப்படம் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.46 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக நேற்றிரவு அறிவித்தது.
எதிர்மறை விமர்சனங்களால் முதல்நாள் வசூலுக்குப் பிறகு படத்தின் வசூல் குறித்து படக்குழு எந்தக் கருத்தும் பதிவிடவில்லை.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது: ரெட்ரோ படத்தில் இருந்து கற்றுக்கொண்டது என்னவென்றால் இனிமேல் ஆன்லைனில் வரும் விமர்சனங்களைப் படிக்கவே கூடாது.
ரசிகர்களுக்கு படம் பிடித்திருக்கிறது. திரையங்கம் சென்றால் அந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் படத்துக்கென 200-300 பேர் வேலை செய்கிறோம். வேண்டுமென்றே படக்குழுவின் மகிழ்ச்சியை கெடுப்பதற்காக எழுதுகிறார்கள்.
அதனால், இனிமேல் ஆன்லைனில் விமர்சனங்களைப் படிக்கக் கூடாதென இருப்பதாகக் கூறினார்.