ஆஷஸ் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கம்
இங்கிலாந்து: இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக ஆஷஸ் அணியில் இருந்து விலகியுள்ளார். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். வலது முழங்கை காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து அவரை தேர்வுக்குழு நீக்கியது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜோஃப்ரா ஆர்ச்சரின் சமீபத்திய ஸ்கேன் பரிசோதனையில் அவரது வலது முழங்கையில் காயம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதிலிருந்து மீள ஆர்ச்சருக்கு நீண்ட நாட்கள் தேவைப்படும்.
அவருக்கு பிரிட்டன் மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு எதிரான 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. போட்டி ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இம்மாத இறுதியில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் செயல்படுகிறார். அவருடன் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், சாக் க்ரோலி, பென் டக்கெட், டேன் லாரன்ஸ், ஜேக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஒல்லி ராபின்சன், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் இணைந்துள்ளனர்.