ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்… பெங்களூருவை வென்ற குஜராத்
ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி நேற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 14 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் பெற்றுள்ள மும்பை அணி தற்போது பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
புதன்கிழமை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. விராட் கோலி அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்தார்.
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரித்திமான் சாஹா, சுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினர். சாஹா 12 ரன்னில் வெளியேற அடுத்து இணைந்த விஜய் சங்கருடன் சேர்ந்து சுப்மன் கில் பெங்களூரு பவுலிங்கை வெளுத்தெடுத்தார். இருவரும் அதிரடியாக ரன்களை குவித்து அணியின் வெற்றியை விரைவுபடுத்தினர். 2 ஆவது விக்கெட்டிற்கு கில் மற்றும் விஜய் சங்கர் 123 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தினர்.
விஜய் சங்கர் 35 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கில் 52 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டியது.
தோல்வியடைந்த பெங்களூரு அணி தொடரிலிருந்து வெளியேற, 16 புள்ளிகளை கைவசம் வைத்திருக்கும் மும்பை அணி ப்ளே ஆஃப் எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னையில் வரும் செவ்வாயன்று நடைபெறவுள்ள குவாலிபையர் சுற்றில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. புதன் அன்று எலிமினேட்டர் சுற்றில் மும்பையை லக்னோ அணி எதிர்கொள்கிறது.