வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. சாதனை படைத்த ஜடேஜா-குல்தீப் யாதவ்
பிரிட்ஜ்டவுன்: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 22.5 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஜடேஜா-குல்தீப் யாதவ் 7 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளனர். அதாவது ஒரு போட்டியில் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற புதிய சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.