June 24, 2024

ஊசி போட்டுக்கொண்டு உலகக்கோப்பையில் விளையாடிய முகமது ஷமி

விளையாட்டு: சமீபத்தில் நடந்து முடித்த உலகக்கோப்பைத் தொடரில் முதலில் சில போட்டிகளில் வாய்ப்பே கிடைக்காமல் ஷமி ஓரங்கட்டப்பட்டிருந்தார். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்ட பிறகுதான் ஷமியை பிளேயிங் லெவனிலேயே எடுத்தார்கள். தாமதமாக வாய்ப்பு கிடைத்திருந்தாலும் கிடைத்த வாய்ப்பில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் வெற்றிகளுக்கு மிக முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தார்.

உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார் ஷமி. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் முகமது ஷமியும் இடம் பெற்றிருந்தார். ஆனால் கணுக்கால் காயம் காரணமாக அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் முகமது ஷமியின் காயம் குறித்து அவருக்கு நெருங்கிய முன்னாள் பெங்கால் அணி வீரர் ஒருவர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “ஷமிக்கு நீண்டகாலமாக இடது குதிகாலில் பிரச்சினை உள்ளது. அவர் உலகக் கோப்பையின் போது வலிக்காக ஊசி போட்டுக் கொண்டுதான் விளையாடினார் என்பதும் பல போட்டிகளில் வலியுடன்தான் விளையாடினார் என்பதும் இங்குப் பலருக்குத் தெரியாது. வயதாக வயதாக ஒவ்வொரு காயத்திலிருந்தும் வலியிலிருந்தும் மீள்வது சிரமமாகவே இருக்கும்” என்றார்

இப்போது மட்டுமில்லை 2015ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போதும், ஷமிக்கு முழங்கால் வீக்கம் இருந்தது. அவர் அறுவை சிகிச்சையை விடுத்து, இந்தியாவுக்காக விளையாட ஊசி போட்டு விளையாடினார் என்பதும் நினைவுக்கூரத்தக்கது. இந்த தகவலை ஷமியே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!