பயிற்சி முகாமில் ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்
மும்பை: ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா தலைமையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இருப்பினும், மும்பை அணி நிர்வாகம் உடனடியாக ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை அந்த பாத்திரத்திற்கு கொண்டு வந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு ரோஹித் சர்மா ஒருமுறை கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்பது குறித்து பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அளித்த விளக்கத்தை ரோஹித்தின் மனைவி வெளிப்படையாக நிராகரித்திருந்தார். இது பிரச்சனையின் தீவிரத்தை காட்டியது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாம் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
இந்த முகாமில் நேற்றுதான் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்றார். அப்போதும் ஹர்திக் பாண்டியாவை சந்திக்காமல் சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதேபோல், வீரர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றபோதும் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அனைத்து வீரர்களும் பங்கேற்ற பயிற்சி முகாம் மும்பையில் நடைபெற்றது.
இதில் வீரர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது ரோகித் சர்மாவை பார்த்த ஹர்திக் பாண்டியா நேரடியாக அவரிடம் சென்று கட்டி அணைத்தார். இதனால் ரோகித் சர்மாவும் அவரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். இதனைப் பார்த்தவுடன் மற்ற வீரர்களும் கைதட்டி வரவேற்றனர். அதன் பிறகு பயிற்சியாளர் மார்க் பவுச்சர், அனைத்து வீரர்களையும் அழைத்து இந்த சீசனுக்கான யுக்திகளை பேச ஆரம்பித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இருந்த பிரச்சனை தற்போது இந்த நிகழ்வின் மூலம் முடிவுக்கு வந்திருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.