மல்யுத்தத்தை விட்டே விலகுகிறேன்… அறிவித்த சாக்ஷி மாலிக்
விளையாட்டு: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது டெல்லி காவல்துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது.
இருப்பினும் கைது செய்யாமல் வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளதை கண்டித்து டெல்லியில் தினேஷ் போகாட், சங்கீதா போகாட், சாக்ஷி மாலிக், சத்யவர்த் காடியன், பஜ்ரங் பூனியா, ஜிதேந்தர் கின்ஹா உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட்டு அவர் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் புதிய தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிரிஜ் பூஷனின் உதவியாளர் என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக மல்யுத்த வீரர்கள் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ”புதிய தலைவராக ஒரு பெண் தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால், தலைவர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் ஒரு பெண் கூட இல்லை. பிரிஜ் பூஷனின் உதவியாளரை தான், தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார். மேலும் தான் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக கண்ணீருடன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.