துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பமாகி உள்ளது. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை ‘டி–20’ தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடர் வரும் செப் 28ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் சீனியர் வீரர்களின் ஆட்டத்தை காண முடியாது. ‘டி-20’ அரங்கில் இருந்து இந்தியாவின் கோலி, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, சாகிப் அல் ஹசன் (வங்கம்) ஓய்வு பெற்று விட்டனர்.
பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம், ரிஸ்வான், ‘நடப்பு சாம்பியன்’ இலங்கை அணியில் ‘ஆல்-ரவுண்டர்’ ஏஞ்சலோ மாத்யூஸ் இடம் பெறவில்லை. அனைத்து அணிகளும் இளம் வீரர்களை நம்பி களமிறங்குகின்றன.
‘டி-20’ உலக சாம்பியனான இந்திய அணி வலுவாக உள்ளது. மூன்று ‘டி-20’ அணிகளை களமிறக்கும் அளவுக்கு திறமையான வீரர்கள் உள்ள னர். இதனால் தான் ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் கூட வாய்ப்பு பெற முடியவில்லை. பிரிமியர் தொடர் அனுபவம், நமக்கு சாதகம். சூர்யகுமார் தலைமை பெரும் பலம். 22 ‘டி–20’ போட்டிகளில் 18ல் வெற்றி தேடித்தந்துள்ளார். இதன் வெற்றி சதவீதம் 81.82.
‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரரான இவர், சூறாவளியாக சுழன்று ரன் சேர்ப்பார். துவக்கத்தில் அபிஷேக் சர்மா, புதிய துணை கேப்டன் சுப்மன் கில் கள மிறங்கலாம். திலக் வர்மா, ‘ஆல்- ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ‘பினிஷர்’ ரிங்கு சிங் என பேட்டிங்கிற்கு பஞ்சமில்லை. கீப்பர்-பேட்டர் இடத்திற்கு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி காணப்படுகிறது.
பும்ரா, அர்ஷ்தீப் சிங் வரவால் வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது. சுழலுக்கு வருண் சக்ரவர்த்தி, குல்தீப் உள்ளனர்.