புதுடில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.யாக இருக்கும் ஹர்பஜன் சிங், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நேர்முக வர்ணனையின் போது, இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சரை இனவெறியுடன் விமர்சித்ததாக சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஈடுபட்டிருந்தார். அவரை குறித்து ஹர்பஜன் “பிளாக் டாக்ஸி” என்ற வகையில் கமென்ட் செய்தார். லண்டனில் இயக்கப்படும் கருப்பு நிற டாக்ஸிகளின் மீட்டர் எப்போதும் அதிகமாகவே காணப்படும் என்பதுபோல, ஆர்ச்சரின் பந்துவீச்சு வேகமும் உயர்ந்த நிலையிலேயே இருக்கிறது என்ற உவமை ஹர்பஜன் செய்தார்.
இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் ஹர்பஜனின் இந்த கமென்ட் இனவெறி நிறைந்தது என்றும், இது மிக மோசமானது என்றும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சம்பந்தப்பட்ட இங்கிலாந்து வீரரிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஹர்பஜன் சிங் கிரிக்கெட் விளையாடிய காலத்தில், ஆஸ்திரேலிய வீரர் ஆண்டிரூ சைமண்ட்ஸுடன் இனவெறி சார்ந்த சர்ச்சையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அந்த விவகாரத்தில் இந்திய ரசிகர்கள் ஹர்பஜனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
ஆனால் தற்போது அதே ஹர்பஜன் இன்னொரு வீரரை இனவெறி சார்ந்த வகையில் விமர்சித்திருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இச்சம்பவம் பிரபல கிரிக்கெட் இணையதளங்களிலும், சர்வதேச ஊடகங்களிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது.