ஐபிஎல் டி20 கிரிக்கெட் சீசன் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், மும்பை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதல் லெக் ஆட்டங்களில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஜஸ்பிரித் பும்ரா முதுகில் காயம் அடைந்தார்.
இதற்காக அவர் தற்போது பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். பும்ரா போட்டிகளில் விளையாடுவதற்கான முழு உடற்தகுதியை இன்னும் அடையவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்த்தனே, “ஜஸ்பிரித் பும்ரா தற்போது பிசிசிஐ சிறப்பு மையத்தில் உள்ளார். அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

தற்போது நிலைமை நன்றாக உள்ளது, நாளுக்கு நாள் முன்னேற்றம் உள்ளது. பும்ரா நல்ல உற்சாகத்தில் இருக்கிறார், அவர் இல்லாதது சவாலாக இருக்கும். ஏனெனில் அவர் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்” என்றார். மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “என்னுடன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று கேப்டன்கள் விளையாடுவது எனது அதிர்ஷ்டம். அவர்கள் எப்போதும் என் தோளில் கைவைத்து, எனக்கு உதவி தேவைப்படும்போது அங்கு இருப்பார்கள்” என்றார்.