இந்தியாவிடம் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தாலும் திருந்தாத பாகிஸ்தான், இப்போது 2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் நாட்களிலேயே பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. 2025 ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்தி முன்னதாகவே பிஎஸ்எல் தொடரை திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தற்போது இதை மேலும் ஒரு போட்டித் தன்மைக்கு மாற்றியுள்ளது.

இந்திய ராணுவம் ராவல்பிண்டி அருகே ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானபோது, பயந்த பிசிபி பிஎஸ்எல் தொடரை நிறுத்தி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற முயற்சி செய்தது. ஆனால், ஜெய் ஷாவின் நட்புக்காக UAE கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்ததால் பிஎஸ்எல் தொடரை காலவரையின்றி நிறுத்த வேண்டிய நிலை உருவானது.
இந்த பின்னணியில், தற்போது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் மே 17 முதல் மே 25 வரை நடைபெற உள்ள நிலையில், அதே தேதிகளில் பிஎஸ்எல் தொடரையும் நடத்த உள்ளதாக பிசிபி அறிவித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் தாக்கியதாக கூறப்படும் ராவல்பிண்டி மைதானத்திலேயே போட்டிகளை நடத்தும் திட்டம் உள்ளது.
இந்த முடிவுகள் பாகிஸ்தானின் இந்தியாவை சீண்டும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், வெளிநாட்டு வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்பார்களா என்பது பெரும் சந்தேகமாக உள்ளது. கடந்த ட்ரோன் தாக்குதல்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால், வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானில் சிக்கி தவித்தார்கள்.
இதற்கு மாறாக, இந்தியாவில் எந்த ஒரு பகுதிக்கும் அதிக பாதிப்பு ஏற்படவில்லை. ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள் தங்கள் நாடுகளுக்கோ அல்லது துபாய், சிங்கப்பூர், மாலத்தீவு போன்ற இடங்களுக்கோ பாதுகாப்பாகச் சென்றனர். அவர்கள் அனைவரும் மே 17 அன்று தொடங்கும் ஐபிஎல் தொடரில் திரும்ப பங்கேற்க உள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையை வைத்து, பாகிஸ்தானுக்குப் பலரும் வர மாட்டார்கள் என்றும், அடுத்த சில ஆண்டுகளுக்கும் இது தொடரும் என்றும் கருதப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிஎஸ்எல் தொடரை ஐபிஎலுக்கு போட்டியாக நடத்த முயற்சிப்பது வெறும் வீண்பராக்குமென்றே கருதப்படுகிறது.