ஐதராபாத்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மாபெரும் உலக சாதனை படைத்துள்ளது. என்ன தெரியுங்களா?
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 106 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 70 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் ஹர்ஷல் பட்டேல், சிமர்ஜீத் சிங் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் அதிரடியில் வெளுத்து வாங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மொத்தம் 34 பவுண்டரிகள் அடித்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் படைத்துள்ளது.