புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் (CCEA) கூட்டம் நடைபெற்றது. எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துப் பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “நாட்டின் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறப்பதற்கு CCEA ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் 86,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள். இது 4,600-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களையும் உருவாக்கும். இதற்காக 9 ஆண்டுகளில் ரூ. 5,863 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதில், ரூ. 2,586 கோடி மூலதனச் செலவாகவும், ரூ. 3,277 கோடி செயல்பாட்டுச் செலவாகவும் இருக்கும்” என்றார்.

‘X’ தளத்தில் பிரதமர் மோடி ஒரு பதிவில், “57 புதிய கே.வி. பள்ளிகளை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் பள்ளிகளும் அடங்கும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது ஏராளமான மாணவர்களுக்கு பயனளிக்கும் மற்றும் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
இது குறிப்பாக லட்சத்தீவு மாவட்டங்கள், வடகிழக்கு மற்றும் பிற தொலைதூரப் பகுதிகளில் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்” என்று அவர் கூறினார்.