பனாஜி: கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் பெர்னெம் நகருக்கு அருகில் உள்ள கோர்காவ் கிராமத்தில் ஸ்ரீ தேவ் ரகுகோன்ஷெட் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடந்த இவ்விழாவில், பேர்னேம் நகரம் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவின் முடிவில் இறைவனுக்குப் படைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. அப்போது, பக்தர் ஒருவர் புனித தேங்காயை ரூ.10 லட்சத்துக்கு வாங்கினார். அதை அவர் வீட்டில் வைத்து வழிபடுவார் என்பது ஐதீகம். இந்த கோவிலில் கடந்த ஆண்டு நடந்த திருவிழாவின் போது, ஒரு புனித தேங்காய் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் போனது.
திருவிழாவின் போது வாழைப்பழம், தர்பூசணி, அன்னாசி உள்ளிட்ட பழங்கள் இறைவனுக்கு படைக்கப்படுவது வழக்கம். திருவிழா முடிந்ததும் இவை அனைத்தும் கோயில் நிர்வாகக் குழுவினரால் ஏலம் விடப்படும். இதன் மூலம் கிடைக்கும் நிதி, கோவில் நிர்வாக பணிகளுக்கும், சமுதாய பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என, கோவில் நிர்வாக குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.