மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததையடுத்து, வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கத் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கை வீடு மற்றும் வாகன கடன் வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ரெப்போ-இணைக்கப்பட்ட கடன்களுக்கான (ஆர்பிஎல்ஆர்) வட்டி விகிதத்தை 9.05 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாகக் குறைப்பதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

இந்த குறைக்கப்பட்ட வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியும் அதன் ஆர்எல்எல்ஆர் வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா ஆர்பிஎல்ஆர் கடன் வட்டி விகிதத்தை 9.1 சதவீதத்தில் இருந்து 8.85 சதவீதமாக குறைத்துள்ளது.
இந்த குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதக் குறைப்புக்கு நிதிக் கொள்கைக் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. இது வங்கிகளிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், குறைந்த வட்டி விகிதத்தில் வாடிக்கையாளர்கள் கடன் வாங்கவும் உதவும் என ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. ரெப்போ விகிதத்தின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.