புதுடெல்லி: 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித் தொகை வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, டில்லியில் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என, பா.ஜ., மேலிடம் உறுதி அளித்தது. இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான நேற்று, டில்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில், டில்லி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கும், ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்தை செயல்படுத்த, 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:- இத்திட்டத்தை செயல்படுத்த, டில்லி அரசு, 5,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளை கண்டறிய எனது தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளின் பெயர்களை பதிவு செய்யும் பணி விரைவில் துவங்கும். இதற்கான இணையதளமும் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
டில்லி அமைச்சர் மன்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “பெண்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். “தற்போது, அமைச்சர்கள் கபில் மிஸ்ரா, ஆஷிஷ் சூட், பர்வேஷ் வர்மா ஆகியோர் அடங்கிய, மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்,” என்றார்.