டெல்லியில் உள்ள தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கல்விக் கட்டணத்தை உயர்த்துவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கட்டண நிர்ணயத்தை ஒழுங்குபடுத்தவும், அதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் டெல்லி அரசு புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதாவிற்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “டெல்லி அரசு ஒரு துணிச்சலான மற்றும் வரலாற்று நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த சட்டம் டெல்லியில் உள்ள 1,677 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளில் கட்டண நிர்ணயத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை வழங்கும். வரலாற்றில் முதல் முறையாக இதுபோன்ற சட்டம் அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது.”

கல்வி அமைச்சர் ஆசிஷ் சூட் கூறுகையில், “புதிய விதிகளை செயல்படுத்த மூன்று குழுக்கள் அமைக்கப்படும். பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படும். கட்டண நிர்ணயக் குழுவில் 3 ஆசிரியர்கள் மற்றும் 5 பெற்றோர்களும் இருப்பார்கள்.”