டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
நேர்மையை நிரூபிக்க மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே முதல்வர் பதவியை ஏற்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். நவம்பரில் மராட்டிய தேர்தலுடன் டெல்லி தேர்தலையும் நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. தற்போது அமைச்சராக உள்ள ஆதிஷி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார் என ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங் கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மக்கள் பெரும்பான்மையுடன் நேர்மை சான்றிதழை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர் டெல்லி மக்களுக்கு முழு நேர்மையுடன் சேவை செய்துள்ளார்.
நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த கெஜ்ரிவால், ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு பாதுகாப்பு, அதிகாரபூர்வ இல்லம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.
அவரது பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அவர் ஒருமுறை அல்ல பலமுறை தாக்கப்பட்டதாகவும், அவரது பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாகவும் அவரிடம் விளக்க முயற்சித்தோம்.
ஆனால் கடவுள் தான் காப்பாற்றுவார் என்று முடிவு செய்தார். அதன்பிறகு, கெஜ்ரிவால் எங்கு வசிக்கிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.