சென்னை: மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் டெல்லியில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, பல்கலை மானியக் குழு (யுஜிசி) செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து வகை உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க, படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் அவசியம். இதை மனதில் வைத்து, மத்திய கல்வி அமைச்சகம், நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்து, பிப்ரவரி 1 முதல் 9 வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரமாண்ட புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு சிறப்பு கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெறும்.

இதில் 2,000-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள். மேலும், புத்தக வர்த்தகம் தொடர்பான கூட்டங்கள், இலக்கிய நிகழ்வுகள் நடத்தப்படும். எனவே, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், நூலகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரை இவ்விழாவில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அறிவு மற்றும் அரிய தகவல்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.