புது டெல்லி: எந்தவொரு சைபர் அச்சுறுத்தல்களையும் தடுக்க உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) வர்த்தக உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ளது. பிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில், “ரான்சம்வேர், சப்ளை செயின் ஊடுருவல், டிடிஓஎஸ் தாக்குதல்கள், வலைத்தள சிதைவு, தீம்பொருள் போன்ற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சைபர் தாக்குதல்கள் குறித்து சந்தை பங்கேற்பாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அவர்கள் உடனடியாகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நமது நாட்டின் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் செயல்படும் நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (சிஇஆர்டி-இன்) சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு வந்துள்ளது,” என்று பிஎஸ்இ தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தைத் தொடர்ந்து வங்கிகள் தங்கள் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன. வங்கிகள் தங்கள் கிளைகளில், குறிப்பாக எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை அதிகரித்துள்ளன.