புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள பல உயர் நீதிமன்றங்களில் ஆன்லைன் சூதாட்ட சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஒருங்கிணைத்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் நிலை அதிகரித்ததை அடுத்து, மத்திய அரசு 2025 ஆம் ஆண்டு “ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை சட்டம்” என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் படி, ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். விளம்பரப்படுத்துவோருக்கும் இரண்டு ஆண்டு சிறை மற்றும் ரூ.1 கோடி அபராதம் வழங்கப்படும்.

ஆனால், இந்த சட்டத்திற்கு பல்வேறு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பேரில் டில்லி, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஒரே விவகாரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்கள் வெவ்வேறு உத்தரவுகளை வழங்கினால் சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதால், இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றம் எப்போது விசாரணைக்கு எடுக்கிறது என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.