டெம்பிள் கனெக்ட் நடத்தும் சர்வதேச கோயில் மாநாடு மற்றும் கண்காட்சி திருப்பதி ஆஷா அரங்கில் நேற்று மாலை தொடங்கியது. வரும் 19-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 58 நாடுகளைச் சேர்ந்த இந்து, புத்த, சமண, சீக்கிய மதங்களைச் சேர்ந்த 1,581 கோயில்கள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. இந்த மாநாட்டில் கோயில் பராமரிப்பு, கலாச்சாரம், நிர்வாகம், கோயில்களின் மேம்பாடு, தொழில்நுட்பம், கோயில்களில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர். இதில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், “கடவுளை சேவிப்பது தான் முதன்மையானது. நம் நாட்டில் சுமார் 27 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு சராசரியாக 21 கோடி பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சுவாமியை வழிபடுகின்றனர். கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். ஆந்திராவில் உள்ள கோவில்களை ஆண்டுதோறும் பராமரிக்க ரூ.134 கோடி ஒதுக்கப்படுகிறது.
இந்து, சீக்கியம், பௌத்தம், சமணம், அனைத்தும் இந்தியாவில் தோன்றியவை. நாம் அனைவரும் சகோதரர்களைப் போல ஒற்றுமையாக வாழ்கிறோம். தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோவில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆந்திராவில் உள்ள அனைத்து கோவில்களிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோவில்கள் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
இந்த மாநாட்டில், மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபாத நாயக், ஆந்திர அமைச்சர் சத்ய பிரசாத், அனிதா மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், கோவில் நிர்வாக அலுவலர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.