புவனேஸ்வர்: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது, பொதுத் தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்கும் சூழலில், பள்ளிகளுக்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. நேற்று அதிகபட்சமாக போலங்கிர் மாவட்டத்தில் 104.5 டிகிரியும், பௌத் மாவட்டத்தில் 104 டிகிரியும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக பள்ளி நேரங்களை மாற்றி மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.