புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது என இந்தியாவிற்கான சீன தூதர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கான சீனத் தூதர் ஷியு பெயிஹாங் கூறியதாவது:
இந்தியாவும், சீனாவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும். சந்தேகிப்பதை நிறுத்த வேண்டும். இரண்டு நாடுகளும் கூட்டாளிகள். எதிரிகள் அல்ல. நமது கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் களைய வேண்டும். இரண்டு பெரிய அண்டை நாடுகளான இந்தியாவும், சீனாவும் பொதுவான வளர்ச்சிக்கு ஒற்றுமையாகவும், ஒத்துழைப்புடன் செயல்படுவதே ஒரே தீர்வு.
இரு நாடுகளின் நட்பு ஆசியாவுக்கு பலனளிக்கும்.ஆசியாவில் இரட்டை இன்ஜின் பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள். இரண்டு நாடுகளின் ஒற்றுமை, உலகிற்கு பெரிய அளவில் பலனளிக்கும். உலகில் சமத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதில் இரண்டு நாடுகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. இந்தியாவும், சீனாவும் இரண்டு முக்கியமான அண்டை நாடுகள். வளர்ச்சி அடையும் நாடுகள்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க விரைவில் பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இதன்மூலம் இரு நாட்டு உறவில் புது உத்வேகம் பிறக்கும். இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது என தெரிவித்தார்.