பெங்களூரு: காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சீரற்ற இதயத்துடிப்பு காரணமாக அவருக்கு பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். காங்கிரஸ் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே (82), தசரா விடுமுறைக்காக கடந்த 29-ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு வந்திருந்தார்.
30-ம் தேதி, திடீரென உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘பேஸ்மேக்கர்’ சாதனம்: அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சீரற்ற இதயத்துடிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் ‘பேஸ்மேக்கர்’ சாதனம் பொருத்தப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கார்கேவை அழைத்து அவரது நலம் விசாரித்தனர். கார்கே விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கார்கேவின் மகனும் கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, “மல்லிகார்ஜுன கார்கே நலமாக உள்ளார். அவருக்கு உடலில் வயது தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தன. பேஸ்மேக்கர் பொருத்தும் செயல்முறை வெற்றிகரமாக முடிந்தது. அவர் இன்று வீடு திரும்பி தனது வழக்கமான பணிகளைத் தொடங்குவார்” என்று கூறினார்.