புதுடெல்லி: கட்டுமானத் தொழிலாளர் நல நிதியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரூ.70,744 கோடி பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. செப்டம்பர் 30, 2024 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 5 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 723 கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான நல நிதி கட்டுமானத் துறையில் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து வரியாக வசூலிக்கப்படுகிறது.

வசூலிக்கப்பட்ட இந்த ரூ.1,17,507 கோடியில், அதில் பாதி கூட தொழிலாளர் நலனுக்காக விடுவிக்கப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்திய கட்டுமானத் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் அர்கா ராஜ்பண்டிட், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய தொழிலாளர் துறையிடம் சில தகவல்களைக் கோரியுள்ளார்.
அந்தத் தகவலின் அடிப்படையில், தொழிலாளர்களுக்கு ரூ.67,669 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ரூ.70,744 கோடி பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா 19 ஆண்டுகளில் ரூ.19,489 கோடியை வசூலித்து தொழிலாளர்களுக்கு ரூ.13,683 கோடியை மட்டுமே வழங்கியதாகவும், கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் அதே தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“கேரளாவைத் தவிர, பெரும்பாலான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதில்லை” என்று அர்கா ராஜ்பண்டிட் கூறினார்.