
புதுடில்லி:காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்ட அறிக்கை:- மத்திய அரசு, இந்த ஆண்டு ஜூலை – செப்டம்பர் மாதத்திற்கான ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அவை எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தன. இந்தியா 5.4% பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, நுகர்வு 6% அதிகரித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜிடிபி குறைந்துள்ளது. ஆனால் உயிரியல் அல்லாத பிரதமரும் அவரது ஆதரவாளர்களும் இந்த மந்தநிலைக்கான காரணங்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் உள்ளனர். மும்பையைச் சேர்ந்த முன்னணி நிதித் தகவல் சேவை நிறுவனமான India Ratings and Research வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் தேசிய அளவில் ஒட்டுமொத்த உண்மையான ஊதிய வளர்ச்சி 0.01% மட்டுமே.

இதே காலகட்டத்தில் ஹரியானா, அசாம் மற்றும் உ.பி.யில் தொழிலாளர்களின் ஊதியம் குறைந்துள்ளது. அப்படியானால், சராசரி இந்தியரின் வாங்கும் திறன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று குறைந்துள்ளது என்பதை இது குறிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி மந்தநிலைக்கு இதுவே முக்கிய காரணம். 2019-2024-க்கு இடையில் தொழிலாளர்களின் ஊதியம் சரிவைக் கண்டாலும், 2014-2023-க்கு இடையில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் அவர்கள் தேக்கமடைந்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் ஆண்டுதோறும் 6.8% வளர்ச்சியடைந்து வந்ததாக வேளாண் அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இப்போது, மோடியின் ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் மைனஸ் 1.3% ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், 2014-2022-ம் ஆண்டுக்குள் செங்கல் சூளை தொழிலாளர்களின் ஊதியம் குறைந்துள்ளது. இதன் காரணமாக உழைக்கும் வர்க்கத்தின் ஊதிய உயர்வு இல்லாததால், நுகர்வு பாதிக்கப்பட்டு, நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார திறன் வேகமாக சிதைந்து வருகிறது.
இந்தக் கொடுமையான உண்மை எவ்வளவு காலம் புறக்கணிக்கப்படும்? ஆனால், பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் பெருமை பேசுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த விசாரணையிலும் இந்திய அரசு பங்கேற்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், “தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அரசு எப்படி அங்கம் வகிக்கிறது?” என்று கேலி செய்தார்.