புதுடில்லியில் நேற்று மாலை ஏற்பட்ட புழுதிப்புயலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் டில்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் தீவிரமான நிலைமையை எதிர்கொண்டது. விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கடும் வெப்பத்தில் வாடி வந்த டில்லியில், திடீரென கடும் காற்றும் மழையும் ஏற்பட்டது.மணிக்கு 79 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று, நகரின் பல பகுதிகளில் மரங்களை வேரோடு கீழே தள்ளியது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு, போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் இயக்கமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.227 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ 6E2142 என்ற விமானம் நடுவானில் ஆலங்கட்டி மழையின் தாக்கத்தால் ஆட்டம் கண்டது. விமானி அவசர நிலையை அறிவித்து ஸ்ரீநகரில் தரையிறங்க அனுமதி கேட்டார்.
அனுமதி கிடைத்ததும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.விமானத்தில் பயணித்தவர்கள் மிகுந்த பதட்டத்துடன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமான ஊழியர்கள் அவசரநிலை செயல்முறைகளை சரியாக பின்பற்றினர் என்றும், விமானத்தின் சேதம் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் விமான போக்குவரத்துக்கு எவ்வளவு ஆபத்தானவையாக இருக்கக்கூடும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.