டெல்லி: 2026-27 கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை சிபிஎஸ்இ தேர்வு முறை அமலுக்கு வரும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர், சிபிஎஸ்இ தலைவர் மற்றும் சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
இதில், ஆண்டுக்கு இருமுறை சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாணவர்களுக்கான மன அழுத்தமில்லாத கற்றல் சூழலை உருவாக்குவது அரசின் முக்கிய நோக்கமாகும் என்று கூட்டத்தில் தெரிவித்த மத்திய அமைச்சர், இது தேர்வு மேம்பாடு மற்றும் சீர்திருத்தத்திற்கான முக்கியமான படியாக இருக்கும் என்றார். இந்த விவாதங்களின் வரைவுத் திட்டம் விரைவில் சிபிஎஸ்இயால் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய விதிகளை அமல்படுத்துவதில் இந்த சீர்திருத்தம் மற்றொரு முக்கியமான படியாகும் என்றும் மாணவர்களிடையே தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவெடுத்ததை தொடர்ந்து, 12-ம் வகுப்புக்கு, ஆண்டுக்கு, இருமுறை, பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.