
பெங்களூரு: கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டார். கடந்த 20 நாட்களில் அவர் மீது தொடரப்பட்ட இரண்டாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மயி கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது.
இதில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மீது யாராவது கை வைத்தால், இங்குள்ள குறிப்பிட்ட மதத்தினர் மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என எச்சரித்தார்.

இந்த சந்திப்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு முஸ்லிம் அமைப்புகளும், காங்கிரசும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் ஈஸ்வரப்பா மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல், இருதரப்பினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஷிமோகா கோட்டே போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனைகளில் சிக்குவது வழக்கம். இவர் மீது கடந்த 20 நாட்களுக்கு முன்பு கர்நாடக போலீசார் கடவுள் மற்றும் குறிப்பிட்ட மதத்தினரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.