மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் சுனாமி அலைகள் ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் கரைகளைத் தாக்கின. கம்சட்காவிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் பெருங்கடலை ஒட்டிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக சைரன்கள் ஒலிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் குரில் தீவுகளில் சுமார் 4 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கின. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அதைத் தொடர்ந்து ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் நிலநடுக்கம் மற்றும் சுனாமியை உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்ததாக டாஸ் தெரிவித்துள்ளது. அங்கு மின்சாரம் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலாஸ்காவில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அலாஸ்கா, ஹவாய், கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஜூலை தொடக்கத்தில் கம்சட்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதியில் கடைசியாக ஏற்பட்ட நிலநடுக்கம் 1952-ல் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆகும். அந்த நேரத்தில், ஹவாயில் 9.1 மீட்டர் சுனாமி அலைகள் உருவாகின.