சென்னை: மத்திய அரசின் “வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்” மூலம், எதிர்வரும் ஆண்டுகளில் 3 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் விஜய்ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 99,446 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. வேலைவாய்ப்பு வளர்ச்சியை மையமாகக் கொண்டு, இளைஞர்களுக்கு வேலை வழங்குவதில் ஊக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், 2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாகும் வேலைவாய்ப்புகளுக்கு பொருந்தும். முதல் முறையாக வேலைக்கு சென்று, வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு, ரூ.15,000 வரை ஊக்கத்தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இதன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களையும் தொழில்துறையின் கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஊதியம் பெறும் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 வரை வழங்கப்படும். இந்த சலுகை இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படும். உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு நான்காம் ஆண்டு வரை நீட்டிக்கப்படும். இதில் அனைத்துத் துறைகளும் மற்றும் நிறுவனங்களும் அடங்கும். இதனால், நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க ஊக்கமடையும் என்று நம்பப்படுகிறது.
இத்திட்டம், முதன்முதலாக வேலைக்கு செல்வதற்கான நம்பிக்கையை இளைஞர்களிடம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஒரு நேரடி பங்களிப்பாக அமையும். தற்போது தமிழகத்தில் மட்டும் 40 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த திட்டம் மூலம் அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.