புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்தவுடன், நாடு இப்போது இருப்பதை விட வலுவாக முன்னேறும்’ என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறினார். நியாயமான வர்த்தகத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது வர்த்தகப் போரைத் தூண்டியுள்ளது.
இந்திய இறக்குமதிக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு பதிலடியாக பல நாடுகள் தங்கள் வரிகளை அதிகரித்துள்ளன. இருப்பினும், அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில் செயல்படும் இந்திய குழு, அமெரிக்க நிர்வாகத்துடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது முடிவடைந்தவுடன், ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, நாடு அதன் தற்போதைய நிலையை விட வலுவாக முன்னேறும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஏராளமாக கிடைக்கிறது. இந்தியா 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறினார்.