மும்பை: மும்பையில் தொடர்ந்து 3-வது நாளாக கனமழை தொடர்வதால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழைக்குப் பிறகு, மகாராஷ்டிரா தலைநகரில் நேற்று தொடர்ந்து 3-வது நாளாக கனமழை பெய்தது.
இதன் காரணமாக, பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடங்களில் வெள்ளம் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. ஆந்திரா அருகே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த மழையால் அந்தேரி, காட்கோபர், நவி மும்பை மற்றும் தெற்கு மும்பையின் சில முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, நகரத்திற்கு வெளியே செல்லும் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. நகரம் முழுவதும் தொடர்ந்து கனமழை மற்றும் தண்ணீர் தேங்கி நிற்பதால், அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எதற்கும் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு மும்பை மாநகராட்சி மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால், வானிலை ஆய்வு மையம் நேற்று பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மும்பை, தானே மற்றும் ராய்காட் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை கனமழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள செம்பூரில் நேற்று காலை 9 மணி முதல் ஒரு மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும், சிவாஜி நகரில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.