புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வருத்தம் அளிக்கிறது. டெல்லி ரயில் நிலையத்தில் 13 மற்றும் 14 பிளாட்பாரங்களில் ரயில்கள் தாமதமாக வருவதால், கூட்டம் அதிகமாக உள்ளது. கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகள் பிளாட்பாரம் 12-க்கு அதிகமானோர் குவிந்து உள்ளனர். பிரயாக்ராஜ் செல்லும் ரயில் பிளாட்பாரம் 16க்கு வரும் என்ற கடைசி நிமிட அறிவிப்பு, பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதுடன், ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருந்த பிளாட்பாரம் 13 மற்றும் 14ஐ கடக்க முயன்றதால் பெரும் குழப்பம் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்பட்டது. ரயில்வே நிர்வாகம் செய்து தரும் வசதிகளுக்கும், மக்களின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளிதான் நெரிசல்.
டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கவுண்டர்களில் ஒரு மணி நேரத்திற்கு 1,500 முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த அளவுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டபோது, மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் உயர்த்தியிருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இதுபோன்ற ஒரு அசம்பாவித சம்பவத்திற்குப் பிறகு, கூட்டத்தை வெளியேற்றுவதற்காக இரவு 10 மணிக்குப் பிறகு பிரயாக்ராஜுக்கு 4 சிறப்பு ரயில்களை இயக்கினர். இதை முன்னரே செய்திருந்தால் 4 குழந்தைகள் உட்பட 18 உயிர்களை பலி கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. நமது அரசு நிர்வாகமும், அதிகாரிகளும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை என்பதையே இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.
கடந்த மாதம் கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் என்ற இடத்தில் போலே பாபாவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இவை வெறும் எச்சரிக்கை மணிகள். இதுபோன்ற சம்பவங்களிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி. நாட்டின் மக்கள் தொகை 142 கோடியை எட்டியுள்ள நிலையில், உலகிலேயே அதிக மக்கள் தொகை நெருக்கடி உள்ள நாடாக இந்தியா மாறியுள்ளது. இதற்கு நமது சிந்தனையும் செயல்களும் மாற வேண்டும்.
100 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகள் இன்றைய காலத்திற்கு ஏற்றதாக இல்லை. நாட்டிலேயே மிகப்பெரிய போக்குவரத்து வசதி உள்ள ரயில்வே நிர்வாகம், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் வசதிகளை உருவாக்க வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப ரயில் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். 142 கோடி என்ற எண்ணிக்கையை மனதில் வைத்து, பிளாட்பாரங்கள், படிக்கட்டுகள், போக்குவரத்து வசதிகள், அவசரகால வசதிகள், அடிப்படை கட்டமைப்புகள் போன்றவை பிரமாண்டமாக கட்டப்பட வேண்டும். அதேபோல எங்கே, எப்படி கூட்டம் கூடும் என்று போலீசாருக்கு தெரியவில்லை. மேலும் முக்கிய நிகழ்வுகளின் போது மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தின் அளவை மதிப்பீடு செய்வதும், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு நிர்வாகத்துடன் இணைந்து செய்வதும் காவல்துறையின் கடமையாகும்.