புதுடில்லி: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) குறித்த புதிய கட்ட பேச்சுவார்த்தை இன்று டில்லியில் தொடங்கியது.
இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக சக்தி; ஐரோப்பிய யூனியன், உலகின் வலுவான பொருளாதார சக்தி. இவ்விருவருக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த முயற்சிகள் 17 ஆண்டுகளாக இழுபறியாகி வந்தன. 2013ல் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்ட நிலையில், 2022 ஜூனில் மீண்டும் தொடங்கியது.

இந்த ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க இருதரப்பும் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த 4ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனும் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியது இதற்குச் சான்றாகும்.
இந்த ஆண்டுக்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நோக்கில், தற்போதைய பேச்சுவார்த்தையில் வரி சாரா தடைகள், சந்தை அணுகல் மற்றும் அரசு கொள்முதல் போன்ற முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள கூடுதல் வரி மத்தியில், இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.