புதுடெல்லி: அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா எரிசக்தி வாரம் தொடர்பான நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார். இது தொடர்பான காணொளியை பிரதமர் அலுவலகம் நேற்று ஒளிபரப்பியது. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:- இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி திறன் தற்போது 32 மடங்கு அதிகரித்துள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தியில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
கூடுதலாக, நமது புதைபடிவமற்ற எரிபொருள் ஆற்றல் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபருக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை எட்டுவதற்கான பாதையில் இந்தியா உள்ளது. “மேக் இன் இந்தியா” முயற்சியின் மூலம் உள்ளூர் விநியோகம் மற்றும் உற்பத்தியை வலுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவின் சூரிய மின் உற்பத்தி மற்றும் தொகுதி உற்பத்தி திறன் கடந்த பத்தாண்டுகளில் கணிசமாக விரிவடைந்துள்ளது. அதாவது, 2 ஜிகாவாட்டிலிருந்து 70 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இன்று, இந்தியாவின் உயிரி எரிபொருள் தொழில் வேகமாக வளரத் தயாராக உள்ளது. இந்தியாவில் 500 மில்லியன் மெட்ரிக் டன் நிலையான மூலப்பொருட்கள் உள்ளன. இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியில் இருந்தபோது, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி உருவாக்கப்பட்டது. இது தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதில் 28 நாடுகளும் 12 சர்வதேச அமைப்புகளும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது கழிவுகளை செல்வமாக மாற்றி, சிறப்பான மையங்களை உருவாக்குகிறது, என்றார்.