புதுடெல்லி: வரும் நிதியாண்டில் மாலத்தீவுக்கு இந்தியா ரூ.600 கோடி நிதி உதவி வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- நமது அண்டை நாடான மாலத்தீவுக்கு கடந்த ஆண்டு இந்தியா ரூ.470 கோடி நிதியுதவி அளித்தது.
இது வரும் நிதியாண்டில் ரூ.600 கோடியாக அதிகரிக்கும். வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் மொத்த நிதி உதவி ரூ.4,883 கோடியில் இருந்து ரூ.5,483 கோடியாக உயரும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ. 20,516 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளுக்கு இந்தியா அவ்வப்போது நிதியுதவி அளித்து வருகிறது. இந்தப் பணத்தின் மூலம் அந்த நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அந்த வகையில் இந்தியா தற்போது மாலத்தீவுக்கு ரூ. 600 கோடியை இந்தியா வழங்கியுள்ளது. அதேபோல், பூடானுக்கு ரூ. 2,150 கோடி, ஆப்கானிஸ்தானுக்கு ரூ. 100 கோடி, மியான்மருக்கு ரூ. 350 கோடி, நேபாளத்திற்கு ரூ. 700 கோடி, இலங்கைக்கு ரூ. 300 கோடி, வங்கதேசத்துக்கு ரூ.120 கோடி இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.