புதுடில்லி: பாலஸ்தீனப் பிரச்னையில் இந்தியா தன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்த வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியதாவது: பாலஸ்தீனப் பிரச்னை இப்போது நீதி, அடையாளம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டமாக மாறியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பாஜக அரசின் ஆழ்ந்த மவுனம் மனிதநேயத்தையே கைவிடும் செயலாகும். பிரதமர் மோடி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையிலான தனிப்பட்ட நட்பைக் கருத்தில் கொண்டு அரசு செயல்படுவது, இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றதல்ல.

ஏற்கனவே பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, போர்ச்சுகல் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் பட்டியலில் இணைந்துள்ளன. பாலஸ்தீன மக்களின் நீண்டநாள் நியாயமான விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான முதல் படியாக இதை பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காசா மக்கள் பஞ்சம் போன்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவம் உணவு, மருந்து உள்ளிட்ட அவசியமான உதவிகளை கொடூரமாகத் தடுத்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணவுக்காக உதவி மையங்களில் காத்திருந்தபோது சுட்டுக் கொன்றது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சோனியா கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.