கொப்பால் இரும்பு தொழிற்சாலையின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு முதல்வர் சித்தராமையா, கொப்பால் கலெக்டர் நளின் அதுலுக்கு உத்தரவிட்டுள்ளார். கொப்பால் ஹலவர்த்தியில் உள்ள தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியான கழிவுகள் மற்றும் துாசிகள், ஹலவர்த்தி, அல்லாநகர், சிக்கபனகல், ஹிரேபனகல், கசனகண்டி கிராம மக்களை கடுமையாக பாதிக்கின்றன.
இந்த தொழிற்சாலை, ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 13 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட இரும்பு தொழிற்சாலை என்று பால்டோட்டா நிறுவனம் கட்டி வந்தது. ஆனால், இந்த தொழிற்சாலை அமைப்பதால் மக்களின் உடல் ஆரோக்யம் பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்களும் சேதமடையுமென, மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மாதம் 24ம் தேதி, கொப்பாலில் இந்த தொழிற்சாலை அமைப்புக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மடாதிபதி அபிநவ கவிசித்தேஸ்வர சுவாமி தலைமையில் நடந்த பேரணிக்கு 150க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு அளித்தன. இந்த போராட்டத்தில் கட்சி பேதங்களை மீறி, அரசியல் தலைவர்களும் ஒரே அணியில் திரண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவை பெங்களூரு காவேரி இல்லத்தில் கன்னட மற்றும் கலாசார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, கொப்பால் எம்.பி. ராஜசேகர் பசவராஜ் ஹிட்னால் மற்றும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். அவர்களுடன், போராட்ட குழுவும் கலந்துரையாடியது.
தொழிற்சாலை அமைப்பதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்ட போது, அவர் அனைத்தையும் பொறுமையாக கேட்டுப் பார்த்தார். பின்னர், கொப்பால் கலெக்டர் நளின் அதுலை தொடர்பு கொண்டு, இரும்பு தொழிற்சாலைப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.