புவனேஸ்வர்: பிஎஸ்எல்வி-சி 61 /இஓஎஸ்-09 திட்டம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இதற்கான விசாரணை தேசிய அளவில் நடத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், 2027ஆம் ஆண்டில் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு இஸ்ரோ முழு வீச்சுடன் தயாராகி வருவதாக அவர் கூறினார்.

இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக்கோளை புவி கண்காணிப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு பணிகளுக்காக இஸ்ரோ வடிவமைத்தது. பிஎஸ்எல்வி-சி 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோளை 18 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்த திட்டம் தோல்வியடைந்ததைப் பற்றி இஸ்ரோ தலைவர் புவனேஸ்வரில் நிருபர்களுடன் பேசிய போது, பிஎஸ்எல்வி-சி 61 திட்டத்தின் 3வது நிலையின் போது ‘சேம்பர்’ அழுத்தத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக 4வது நிலை பாதிக்கப்பட்டு திட்டம் தோல்வியடைந்ததாக கூறினார். இந்த தோல்வியின் காரணம் குறித்து தேசிய அளவிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
2025 ஆம் ஆண்டு முக்கியமானது, அதில் சந்திரயான்-4 மற்றும் சந்திரயான்-5 போன்ற திட்டங்கள் உள்ளன. மேலும், 2027 ஆம் ஆண்டில் ககன்யான் திட்டத்தின் மூலம் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம் உள்ளது. உணவு, நீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பாக இஸ்ரோ பணியாற்றி வருகிறது.