ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த பத்தாண்டுகளுக்கு முன் ஜெகன் ரெட்டிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது 405 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துகளில், ஜெகன் ரெட்டி பெயரில் உள்ள 27.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் மற்றும் டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்கு சொந்தமான 377 கோடி ரூபாய் மதிப்புடைய நிலங்கள் அடங்கும். ஆனால், இந்த நிலத்தின் உண்மை மதிப்பு 793 கோடி ரூபாய் என்று டால்மியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், டால்மியா சிமென்ட் நிறுவனம் ஜெகன் ரெட்டிக்கு சொந்தமான ரகுராம் சிமென்ட் நிறுவனத்தில் 95 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்குப் பதிலாக, கடப்பா மாவட்டத்தில் 407 ஹெக்டேர் நிலத்தில் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகை உரிமை வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது முடக்கப்பட்ட நிலம் அந்த சுரங்க அனுமதி பெற்ற இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.