ஸ்ரீநகர்: மரபை மீறி, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக முதல்வர் உமர் அப்துல்லா நேற்று பஹல்காமில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஜம்மு-காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பொறுப்பேற்ற பிறகு கோடைகால தலைநகர் ஸ்ரீநகர் அல்லது குளிர்கால தலைநகர் ஜம்முவுக்கு வெளியே அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் அலுவலகம், “பயங்கரவாத தாக்குதல் நடந்த பஹல்காமில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இது வெறும் வழக்கமான நிர்வாகப் பயிற்சி அல்ல. கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் நாங்கள் அச்சுறுத்தப்படவில்லை என்பது தெளிவான செய்தியாகும். மக்களின் தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதையும், பயத்தை பின்னுக்குத் தள்ளுவதையும் நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை.
ஜம்மு-காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது.” முதல்வர் உமர் அப்துல்லா, ஒரு தனிப்பட்ட பதிவில், “உள்ளூர் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்த நாங்கள் பஹல்காமிற்கு வந்துள்ளோம். பஹல்காமிற்கு படிப்படியாகத் திரும்பி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நன்றி தெரிவிக்கவும் நாங்கள் இங்கு கூடியுள்ளோம். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல்களால் நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம்” என்று கூறினார்.