பெங்களூரு: ”வாரணாசியில் 18.5 கோடி ரூபாய் செலவில் கர்நாடக பவன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது,” என மேல்சபையில் ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
மேல்சபையில் ம.ஜ.த., உறுப்பினர் டி.ஏ.ஷ்ரவணா கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது, ஆந்திர மாநிலம் திருமலையில் கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா பவன் கட்டப்பட்டுள்ளது. 1,576 சதுர அடி நிலத்தில் இந்த பவன் அமைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வி.வி.ஐ.பிக்களுக்கு ஏற்பாடாக கிருஷ்ணதேவராயா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ராஜேந்திர உடையார் கல்யாண மண்டபம் கட்டும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அதை திறக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
திருமலையில் கர்நாடக பவனுக்காக 2022-23 ஆண்டுக்கு 4 கோடி ரூபாயாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 51 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சீருடை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 1928ல் அப்போதைய மைசூரு மஹாராஜா பக்தர்களுக்காக சத்திரம் கட்ட ஏற்பாடு செய்தார். அந்த கட்டடத்தின் ஒரு பகுதி 2024 செப்டம்பர் 21 அன்று இடிந்து விழுந்ததால், பக்தர்களுக்கு தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், 2024 அக்டோபர் 29 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், பழைய கட்டடம் சேதமடைந்து விரிசல்கள் காணப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்தனர்.
பொதுப்பணி துறை அந்த கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. கர்நாடக முதன்மை கட்டட நிபுணர் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் இணைந்து இடத்தை ஆய்வு செய்து, புதிய கட்டடத்தின் வரைபடத்தை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 18.5 கோடி ரூபாயில் இந்த புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.