ஓசூர்: டீசல் மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஓசூர் அருகே தமிழக லாரிகள் பல மணி நேரம் நிறுத்தப்பட்டன. கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழகம் முழுவதும், ஓசூர் ஜூஜூவாடியில், நேற்று முன்தினம் இரவு, 10 மணி முதல், தமிழக பதிவு எண் கொண்ட அனைத்து லாரிகளும், நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், வடமாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வடமாநில பதிவு எண் கொண்ட லாரிகள் வழக்கம் போல் ஓசூர் வழியாக இயக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மேல் தமிழக-கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் படிப்படியாக இயக்கப்பட்டன. இந்நிலையில், கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள வட்டாரா போக்குவரத்து அலுவலகம் முன்பு கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர், மாநில போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவிடம் லாரி உரிமையாளர்கள் மனு அளித்தனர். டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என தென் மாநில லாரி உரிமையாளர்கள் நல சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார்.