முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) கடந்த 26-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, அவரது உடல், நேற்று முன்தினம், சீக்கிய மத வழக்கப்படி, யமுனை நதிக்கரையில் உள்ள நிகாம்போத் காட் பகுதியில், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மன்மோகன் சிங்கின் அஸ்தி நேற்று காலை குருத்வாரா மஜ்னு கா திலா சாஹிப்க்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர், அவரது அஸ்தியை அவரது உறவினர்கள் அருகில் உள்ள யமுனை ஆற்றில் கரைத்தனர். இதையடுத்து, மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர், மகள்கள் உபிந்தர், தமன், அம்ருத் ஆகியோர் உறவினர்களுடன் குருத்வாராவில் சடங்குகள் செய்தனர். குறிப்பாக, அவர்கள் ஷபாத் கீர்த்தன் (குரு கிரந்த சாஹிப்) மற்றும் பாத் (குர்பானி) பாடல்களைப் பாடி பிரார்த்தனை செய்தனர்.