புதுடெல்லி: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்தவர் ரன்வீர் அல்லபாடியா (30). பல்வேறு யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். இவரது சேனல்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். யூடியூப் சேனல்கள் மூலம் மிகக் குறுகிய காலத்தில் ரூ.60 கோடி சொத்துகளை சம்பாதித்துள்ளார். சமீபத்தில், ‘இண்டியா காட் டேலண்ட்’ நிகழ்ச்சியில் நடுவராக ரன்வீர் அல்லபாடியா பங்கேற்றார். அப்போது அவர் கூறிய ஆபாசமான கருத்துகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான நாடாளுமன்றக் குழு, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்கு அண்மையில் கடிதம் அனுப்பியது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நாடாளுமன்றக் குழுவிடம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் தேவை என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவையும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளன.
இது தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைனில் ஆபாசமான கருத்துகள் மற்றும் வீடியோக்களை அகற்றவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தற்போதைய சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தலைமையிலான நாடாளுமன்றக் குழு பிப்ரவரி 25-ம் தேதி கூடுகிறது.அப்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் விளக்கம் விரிவாக ஆராயப்படும். அதன்படி நாடாளுமன்றக் குழு உரிய பரிந்துரைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.